சென்னை: மத்திய தகவல் ஆணையத்தில் காலியாகவுள்ள தலைமை ஆணையர், தகவல் ஆணையர் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான தகுதியும், விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை மத்திய அரசு வரவேற்றுள்ளது.
தற்போது, தலைமைத் தகவல் ஆணையராக விஜய் சர்மா பதவி வகித்து வருகிறார். வரும் டிசம்பர் மாதத்தில் அவர் ஓய்வு பெறவுள்ளார். இதையடுத்து புதியத் தலைமைத் தகவல் ஆணையர் நியமிகக்கப்படவுள்ளார்.
இதுதொடர்பாக மத்தியப் பணியாளர், பயிற்சித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் பணியிடத்துக்கும், காலியாக உள்ள 3 தகவல் ஆணையர் பணியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பதாரர் பொது வாழ்வில் புகழ்பெற்றவராகவும், சட்டம், அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை, ஊடகவியல் உள்ளிட்ட துறைகளில் அனுபவம் வாய்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் சட்டப்பேரவை உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ, அரசியல் கட்சியைச் சேர்ந்தவராகவோ இருத்தல் கூடாது.
இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை, அக்டோபர் மாதம் 12-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் 5 ஆண்டுகள் வரை அல்லது அதிகபட்சம் 65 வயது வரை, இதில் எதுமுன்னதோ அதுவரை அந்தப் பதவியில் நீடிக்கலாம். அவருக்கு தலைமைத் தேர்தல் ஆணையருக்கு இணையான ஊதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.