சென்னை: நாட்டிலுள்ள 10 உயர்கல்வி நிறுவனங்களுக்கு மானியம் அளித்து அதன் கல்வித் தரத்தை உயர்த்த மத்திய மனித வள அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
நாட்டில் உயர்கல்வியை அளிக்கும் சில கல்வி நிறுவனங்கள் உலக அளவில் முதல் 100 இடங்களில் உள்ளன. அதே நேரத்தில் சில கல்வி நிறுவனங்கள் முதல் 500 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் மட்டுமே உள்ளன.
அந்தக் கல்வி நிறுவனங்களையும் முதல் 100 கல்வி நிறுவனங்கள் பட்டியலுக்குள் கொண்டு வர மத்திய மனித வள அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அந்த நிறுவனங்களைக் கண்டறிந்து அவற்றுக்கு அடுத்த 4 ஆண்டுகளுக்குள் போதுமான மானியம் வழங்கி அதன் கல்வித் தரத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த நிறுவனங்களுக்கு அடுத்த 4 ஆண்டுகளுக்குள் ரூ.100 முதல் ரூ.500 கோடி மானியம் வழங்கப்படும். அந்தத் தொகையைக் கொண்டு அந்த கல்வி நிறுவன வளாகத்தில் உலகத் தரத்தில் ஆராய்ச்சி கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள் உருவாக்கப்படும்.
முதல் நிலையிலுள்ள ஐஐடி-கள், பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) ஆகியவையும் இந்தப் பட்டியலில் அடக்கம்.
மேலும் 2013, 2014, 2015 ஆண்டுகளின் அடிப்படையில் எடுத்த புள்ளிவிவரப்படி மேலும் சில கல்வி நிறுவனங்களை மனித வள அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
ஐஐடி டெல்லி, ஐஐடி மும்பை, ஐஐடி கான்பூர், ஐஐடி காரக்பூர், ஐஐடி மெட்ராஸ், ஐஐடி ரூர்க்கி, ஐஐடி கௌஹாத்தி ஆகிய கல்வி நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் அடங்கும் என்று தரிகிறது.
உலக அளவில் இந்த கல்வி நிறுவனங்களின் உயர்த்துவதன் மூலம் நமக்கு எதிர்காலத்தில் திறமைவாய்ந்த மாணவர்கள் கிடைப்பார்கள் என்று மனித வள அமைச்சகம் எதிர்பார்த்துள்ளது.