சென்னை: மத்திய அரசின் அளிக்கும் சிறந்த மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு வரும் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள், குடும்பச் சூழ்நிலைக் காரணமாக உயர் கல்வியில் சேர முடியாமல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்த கல்வி உதவித் தொகைத் திட்டத்தை மத்திய அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
பிளஸ்-2 தேர்வில் 80 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ள, குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சத்துக்கும் குறைவாக உள்ள மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஆண்டுக்கு 82 ஆயிரம் பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. கலை, அறிவியல் இளநிலை பட்டப் படிப்பை மேற்கொள்பவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 1,000-மும் கல்வி உதவித் தொகையும், முதுநிலை கலை அறிவியல் பட்டப் படிப்பின்போது மாதம் ரூ. 2,000-மும் உதவித் தொகையும் வழங்கப்படும்.
இளநிலை பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்பில் சேர்ந்துள்ளவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 1,0000-மும் உதவித் தொகையும், அடுத்து வரும் ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 2,000-மும் உதவித் தொகையும் வழங்கப்படும்.
2015-ஆம் ஆண்டுக்கான இந்த உதவித் தொகைத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், மாணவர்கள் நலன் கருதி இந்த கால அவகாசத்தை அக்டோபர் 15-ஆம் தேதி வரை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நீட்டித்துள்ளது.
மேலும் விவரங்களை www.sholarships.gov.inlogin.do என்ற இணையதளத்தில் காணலாம்.