புதுவை: புதுச்சேரியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்க வரும் 5ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் காலதாமதமாக வெளியிடப்பட்டதாலும், உரிய காலத்துக்குள் இணையதளம் விண்ணப்பங்களை பதிவு செய்யாதததாலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
.புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்படுகின்றன. சென்டாக் மூலம் சேரும் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் கல்வி நிதியுதவித் தொகையும் வழங்கப்படுகிறது.
பொறியியல், மருத்துவம் பயிலும் மாணவ, மாணவியர் இலவசமாக கல்வி பயில இதன்மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடந்த மே மாதம் 27ம் தேதி வரையும், நேரடியாக விண்ணப்பங்களை அளிப்பதற்கு ஜூன் 1ம் தேதி வரையும் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆன்லைன் மூலம் மாணவ, மாணவியர் சிலரால் விண்ணப்பிக்க முடியாததாலும், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவருவதில் ஏற்பட்ட தாமதத்தாலும் சென்டாக் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து இன்று நள்ளிரவு 12 மணி முதல் 4ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நேரடியாக விண்ணப்பங்களை 5ம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலும் விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்படாது. மேலும் விவரங்களுக்கு சென்டாக் இணையதளம் www.centaconline.in இல் பார்வையிடலாம் என சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.