தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி (நாளை) பள்ளிகளில் சுதந்திர தின விழாவினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து பள்ளி கல்வி துறையின் சார்பில் அனைத்துக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
சுதந்திர இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் உள்ளது. இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாற்றையும், போராட்ட வீரர்களின் தியாகங்களையும், தேசியக்கொடி வரலாற்றையும் மாணவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதியன்று சுதந்திர தின விழாவை அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
பள்ளி வளாகத்தை வண்ண மலர்களால் அலங்கரித்து சுதந்திர தினத்தன்று காலை தேசிய கொடியை பள்ளி வளாகத்தில் ஏற்றி மிக சிறப்பாக விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள், நாடகம், போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
குறிப்பாக, நாட்டுப்பற்று, தேசிய ஒருமைப்பாட்டை விளக்கம் வகையில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, விளையாட்டு போட்டிகளை நடத்தி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும்.
பள்ளி வளாகத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், அனைத்து ஆசிரியர்கள், சுதந்திர தின போராட்ட வீரர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து விழாவில் பங்கு பெற செய்ய வேண்டும்.
சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடி சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிகள் சார்பில் அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும். இந்நிகழ்வின் போது மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என அக்கடிதத்தில் தெரிக்கப்பட்டுள்ளது.