ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழுவதும் 29,009 பள்ளிகள் உள்ளன. இவற்றில் சுமார் 2.6 கோடி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே, தேசியக் கல்விக் கொள்கை-2020 அடிப்படையில் பாடத்திட்டம், தேர்வு முறை உட்பட பல்வேறு அம்சங்களில் மாற்றங்களை சிபிஎஸ்இ வாரியம் மேற்கொண்டு வருகிறது.
அதன் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் தற்போது 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையைக் (ஓபிஇ) கொண்டு வருவதற்கு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ மண்டல அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 9,10-ம் வகுப்புகளுக்கான ஆங்கிலம்,கணிதம், அறிவியல் பாடங்களுக்கும், 11, 12-ம் வகுப்புகளுக்கான ஆங்கிலம், கணிதம், உயிரியல் பாடங்களுக்கும் புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் சில பள்ளிகளில் சோதனை அடிப்படையில் இந்ததேர்வுகளை வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை முறைக்குப்பின் பெறப்படும் கருத்துகள், பகுப்பாய்வுகள் ஆகியவற்றைக் கொண்டு இத்திட்டம் அமல்படுத்தப்படும்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையைக் கொண்டு வந்த டெல்லி பல்கலைக்கழகத்திடமும் வாரியம் ஆலோசனை கேட்க உள்ளது.
இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய அரசு, தேர்வு சீர்திருத்தம் குறித்து ஆராய, கான்பூர் ஐ.ஐ.டி பேராசிரியர் பிரேம்குமார் கல்ரா தலைமையிலான வல்லுநர் குழுவை அமைத்தது. அந்த குழு தேர்வு சீர்திருத்த வரைவு அறிக்கையை அப்போது வெளியிட்டது. அதில், கணினி முறையில் தேர்வு, உயர் சிந்தனை ஆய்வு திறன் தேர்வு, சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதுவது உள்ளிட்ட 12 பரிந்துரைகளை பரிந்துரைத்தது. அக்குழுவின் பரிந்துரைகளின்படி, கடந்த ஆண்டு வெளியிட்ட புதிய தேசிய பாடத்திட்டத்தில் உள்ள பரிந்துரைகளின்படி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் முறையை பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி புத்தகத்தை பார்த்தும் எழுதும் தேர்வில், மாணவர்கள் தங்கள் குறிப்புகள், பாடப்புத்தகங்கள் அல்லது பிற ஆய்வுப் பொருட்களை எடுத்துச் செல்லவும் தேர்வின் போது அவற்றைப் பார்த்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுவார்கள்.
இருப்பினும், புத்தகத்தை பார்த்தும் எழுதும் தேர்வுகள், புத்தகங்கள் இல்லாத தேர்வுகளை விட எளிதானவை அல்ல; பெரும்பாலும் அவை மிகவும் சவாலானவை. ஏனென்றால், புத்தகத்தை பார்த்தும் எழுதும் தேர்வு ஒரு மாணவரின் நினைவாற்றலை மதிப்பிடாது, ஆனால் ஒரு பாடத்தைப் பற்றிய மாணவரது புரிதல் மற்றும் கருத்துக்களை பகுப்பாய்வு செய்யும் அல்லது பயன்படுத்துவதற்கான திறனை மதிப்பிடுகிறது. இது ஒரு பாடப்புத்தகத்திலிருந்து விடைத்தாளில் உள்ள உள்ளடக்கத்தை வெறுமனே எழுதுவது மட்டுமல்ல.
இந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சோதனை தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த அனுபவத்தின் அடிப்படையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளிலும் இந்த மாதிரி மதிப்பீட்டை ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்பதை சி.பி.எஸ்.இ வாரியம் முடிவு செய்யும் என்று தெரிகிறது.
உயர்தர சிந்தனை திறன்கள், பயன்பாடு, பகுப்பாய்வு, விமர்சன மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை மதிப்பிடுவதில் இந்த சோதனை தேர்வு கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் மாதத்திற்குள் புத்தகத்தை பார்த்து எழுதும் தேர்வின் சோதனை தேர்வுக்கான வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டை முடிக்க சி.பி.எஸ்.இ வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக டெல்லி பல்கலைக்கழகத்தை (DU) கலந்தாலோசிக்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
கல்வியாண்டை சீர்குலைத்த கோவிட் தொற்றுநோய்களின் போது, ஆகஸ்ட் 2020-ல் எதிர்ப்பையும் மீறி, புத்தகத்தைப் பார்த்து எழுதும் தேர்வுகளை டெல்லி பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது நினைவிருக்கலாம்.
இந்த நடவடிக்கைக்கு எதிராக மாணவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தை சிலர் அப்போது அணுகினர்.
அதில் அவர்கள் கூறும்போது, இந்த தேர்வு இணையம் மற்றும் உள்கட்டமைப்பு வசதி இல்லாதவர்களுக்கு, அதாவது தாழ்த்தப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவு மாணவர்கள், குறிப்பாக பார்வையற்றவர்களுக்கு "பாரபட்சமாக" இருக்கும் என்று வாதிட்டனர். இதையடுத்து, டெல்லி பல்கலைக்கழகத்துக்கு, இறுதியாண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு புத்தகத்தைப் பார்த்து எழுதும் தேர்வுகளை நடத்த அனுமதித்தது.
மாணவர்களுக்கு இந்த தேர்வை முடிக்க மூன்று மணி நேரமும், விடைத்தாள்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய கூடுதலாக ஒரு மணி நேரமும் வழங்கப்பட்டது, அதேநேரம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வுக்கு ஆறு மணி நேரம் வழங்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் திட்டத்துக்கு மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இதற்கு சில மாணவ, மாணவிகளும், பெற்றோரும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications












