சென்னை : அங்கீகாரமற்ற எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் நடத்தப்படுவது, பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும், 18 ஆயிரத்து, 500 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில், 660 பள்ளிகள், சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்று நடத்தப்படுகின்றன; அங்கீகாரம் பெறாமல், 2,000க்கு மேற்பட்ட பள்ளிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 2017 - 18ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது; லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., படிப்புகளில், குழந்தைகளை சேர்த்தவர்கள், கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அதற்கு காரணம், அந்த வகுப்புகளுக்கு, சி.பி.எஸ்.இ., அங்கீகாரமே இல்லை என்பது தான். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் என்பது, ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை மட்டுமே உள்ளது. எல்.கே.ஜி., - யு.கே.ஜி., போன்ற நர்சரி வகுப்புகளை, மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை.
எனவே தான், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், கே.ஜி., வகுப்புகள் கிடையாது. ஆனால், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பல பள்ளிகள், எல்.கே.ஜி யு.கே.ஜி., போன்ற மழலையர் வகுப்புகளையும் நடத்துகின்றன. இந்த வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு அதிககட்டணங்களை வசூலிக்கின்றன.
இந்த விபரம் எதுவும் தெரியாமல், கே.ஜி வகுப்புகளில் குழந்தைகளை சேர்த்த பெற்றோர் கூறியதாவது: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் புத்தகங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆனால், இந்த வகுப்புகளில் சேர்ந்த, எங்களின் குழந்தைகளுக்கு, வேறு புத்தகங்கள் தரப்பட்டன. அதுபற்றி விசாரித்தபோது தான், உண்மை தெரிய வந்தது.
இந்த விபரங்களை, பள்ளிகள் முன்கூட்டியே தெரிவிக்காதது தான், எங்களை போன்றவர்கள் ஏமாந்ததற்கு காரணம்.
இனிமேலாவது, இந்த விவகாரத்தில், சி.பி.எஸ்.இ., முறையான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். ஏமாற்றும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பெற்றோர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
மேலும் கே.ஜி வகுப்புக்களுக்குத்தான் இப்போதெல்லாம் லட்சக்கணக்கில் டோனேஷன் வசூலிக்கப்படுகிறது. லட்சணக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாறும் பெற்றோர்களே இனியாவது ஜாக்கிரையாய் இருங்கள்.