வளர்ந்து வரும் பன்னாட்டு கலாச்சாரம், மற்றும் பொருளாதார நிலை தன்னால் முடியாவிட்டாலும் எப்படியாவது தன் குழந்தை சிபிஎஸ்இ-யில் படிக்க வேண்டும் என்ற ஓர் கட்டாயத்தினை நோக்கி நகர்த்தியுள்ளது. இதன் விளைவு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து சிபிஎஸ்இ, தனியார் பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்துள்ளது.
இதனை பயன்படுத்திக் கொள்ளும் சிபிஎஸ்இ மற்றும் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தையும் வானுயர உயர்த்தி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது சிபிஎஸ்இ நிர்வாகம் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ-யின் புதிய விதிமுறைகள்:
- கூட்டுறவு அமைப்புகள், அறக்கட்டளை மற்றும் நிறுவனங்கள் வணிக ரீதியாகவோ, லாப நோக்கிலோ பள்ளிகளை நடத்தக் கூடாது. பள்ளியை நடத்துவதற்கான செலவுகள் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க வேண்டும். நன்கொடைகள் வசூலிக்கக் கூடாது.
- மாணவர் சேர்க்கைக் கட்டணம் உட்பட எந்தக் கட்டணமும் மாநில அரசுகளின் விதிகளின்படியே வசூலிக்கப்பட வேண்டும். மாநில அரசுகளின் சட்டம், ஒழுங்கு முறை விதிகள் மற்றும் செயல்முறை அறிக்கையின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
- மாணவர் யாராவது படிப்பை பாதியில் விடுவதாக இருந்தாலோ அல்லது வேறு பள்ளிக்கு மாறுவதாகவோ இருந்தாலோ அந்த மாணவர் படிக்கும் காலம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும்.
- மாற்றுச் சான்றிதழ் கேட்டும் வரையோ, கல்வி ஆண்டின் இறுதி வரையிலோ கட்டணம் வசூலிக்கக் கூடாது. மாநிலத்தில் இயங்கும் மற்ற பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம் தொடர்பான விதிகள் அனைத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளின் கட்டண நிர்ணயத்திற்குப் பொருந்தும்.
இவ்வாறு சிபிஎஸ்இ அமல்படுத்தியுள்ள புதிய விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்வராத தமிழக அரசு:
சிபிஎஸ்இ பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கத் தமிழக அரசு முன்வராத நிலையில் சிபிஎஸ்இ-யின் புதிய விதிகளைப் பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர். மேலும், இனிவரும் கல்வி ஆண்டில் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்தத் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை முன்வர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆபீசுல கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனும், உசுப்பேத்துறவன்கிட்ட உம்முனும் இருந்தா இப்படித்தான்!