சென்னை: அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வுகளை எழுத முடியாது என்று சிபிஎஸ்இ உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஎஸ்இ நிர்வாகம் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதன் விவரம்:

சிபிஎஸ்இ-யின் அங்கீகாரம் பெறாத பள்ளிகள், சிபிஎஸ்இ-யுடன் இணைப்புப் பெறாத பள்ளிகள் தங்களது மாணவர்களை பள்ளி இறுதித் தேர்வுகளுக்கு அனுப்ப இயலாது. அவ்வாறு அனுப்ப முயற்சிக்கும் பள்ளி நிர்வாகங்கள் மீது சிபிஎஸ்இ சட்டப்படி நடவடிக்கையை எடுக்கும்.
இணைப்புப் பெறாத பள்ளிகளை சிபிஎஸ்இ கண்காணித்து வருகிறது. சிபிஎஸ்இ கல்வி என்ற போர்வையில் செயல்பட்டு மாணவர்களை ஏமாற்றி சேர்க்கையை நடத்தி வரும் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.
சிபிஎஸ்இ கல்வி என்று கூறிக்கொண்டு மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு, பின்னர் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களின் மூலம் தங்களது மாணவர்களை தேர்வுக்கு அனுப்பும் முறையை சில கல்வி நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன.
இதுதொடர்பான தகவல்கள் சிபிஎஸ்இ-க்கு வந்துகொண்டு இருக்கின்றன. அந்தக் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க சிபிஎஸ்இ தயங்காது.
மேலும் விவரங்களுக்கு சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளளமான http://cbse.nic.in-ல் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications












