சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான(சி.டி.இ.டி.) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தத் தேர்வில் பங்கேற்க ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர்களை நியமிப்பதற்கு சி.டி.இ.டி. தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆரம்ப, உயர்நிலை வகுப்பு ஆசிரியர் பணிக்கு, சி.டி.இ.டி. தேர்வு அடிப்படையில்தான் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
இந்தத் தேர்வில் தாள்-1, தாள்-2 என இரண்டு தாள்கள் இடம்பெற்றிருக்கும். பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மட்டும் ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் தாள்-1 இல் மட்டும் பங்கேற்றால் போதுமானது.
இதுபோல் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மட்டும் ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் தாள்-2 இல் பங்கேற்றால் போதுமானது.
இரண்டு நிலைகளிலும், அதாவது 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புபவர்கள் இரண்டு தாள்களுக்கான தேர்வுகளையும் எழுத வேண்டும்.
இந்தத் தேர்வானது வரும் செப்டம்பர் மாதம் 20-ம் தேதி நடத்தப்பட உள்ளது. காலையில் 9.30 மணி முதல் 12 மணி வரையிலும் தாள்-2 தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரை தாள்-1 தேர்வும் நடத்தப்படும்.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ctet.nic.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு விண்ணப்பிக்க வேண்டும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 19-ம் தேதி கடைசி நாள் என்பதை தேர்வர்கள் மறக்கவேண்டாம்.
தேர்வறை அனுமதிச் சீட்டை செப்டம்பர் 4-ம் தேதி அன்று இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.