சென்னை: சிபிஎஸ்இ நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET)அடுத்த ஆண்டு பிப்ரவரி 21 மற்றும் செப்டம்பர் 18-ம் தேதி நடைபெறவுள்ளது.
ஆண்டுதோறும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுகளை சிபிஎஸ்இ நடத்தி ஆசிரியர்களைத் தேர்வு செய்து அனுப்புகிறது. இந்த ஆசிரியர்கள் சிபிஎஸ்இ பள்ளிகள், மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா, ராணுவ பள்ளிகள், சைனிக் பள்ளிகளில் பணியமர்த்தப்படுவர்.
அடுத்த ஆண்டுக்கான தேர்வுத் தேதிகளை சிபிஎஸ்இ இப்போது அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 21, செப்டம்பர் 18-ம் தேதிகளில் இந்தத் தேர்வுகள் நடைபெறும்.
இதற்கான அறிவிப்பை சிபிஎஸ்இ தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
கடந்த செப்டம்பரில் நடைபெற்ற தேர்வு முடிவுகளை அக்டோபர் 30-ம் தேதி சிபிஎஸ்இ வெளியிட்டது நினைவிருக்கலாம்.
சிபிஎஸ்இ நடத்தும் இந்தத் தேர்வின் சான்றிதழ்கள் அடுத்த 7 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியிலிருந்து 7 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.