சிபிஎஸ்இ மூலம் நடத்தப்படும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். இந்நிலையில், நடப்பாண்டிற்கான தேர்வு நடத்துவதில் சில மாற்றங்களைக் கொண்டு வர சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.
கடந்த கல்வியாண்டில் சிபிஎஸ்சி கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் முன்வைத்த சில கோரிக்கைகளின் அடிப்படையில் ஆங்கிலத் தேர்வு முறையில் மாற்றங்களைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாற்றத்துக்குப் பிறகு கடந்த ஆண்டைப் போல இல்லாமல் வருகின்ற ஆண்டில் ஆங்கிலத் தேர்வு வேறுபட்டு இருக்கும் என சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 10-ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி விகிதம் என்பது கடந்த ஆண்டு வரை எழுத்து தேர்வில் 35 சதவிகிதமும், செய்முறைத் தேர்வில் 35 சதவிகிதமும் மதிப்பெண் பெற வேண்டும். அந்த மதிப்பெண் முறையை மாற்றி அமைக்க தற்போது சிபிஎஸ்இ சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய மாற்றத்தின்படி, எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு ஆகிய இரண்டிலும் சேர்த்து குறைந்தபட்சமாக 35 சதவகிதம் மதிப்பெண் பெற்றால் போதும் என்று மாற்றம் செய்ய சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் தேதியிலும் மாற்றங்களைக் கொண்டு வர திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக மார்ச் மாதம் முதல் வாரத்தில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கும். ஆனால், வருகின்ற பொதுத் தேர்வை பிப்ரவரி இறுதி வாரத்தில் தொடங்கி மார்ச் மாதம் நிறைவு செய்யவாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்பு தேர்வை முதற்கட்டமாகவும், 12ம் வகுப்பு தேர்வை இரண்டாம் கட்டமாகவும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர தொழிற்கல்வி பாடங்களுக்கான தேர்வை முன்கூட்டியே நடத்தலாம் என்றும் முடிவு செய்துள்ளனர். இந்த புதிய தேர்வுத் திட்டத்தின்படி, தற்காலிக தேர்வு அட்டவணை ஒன்றையும் சிபிஎஸ்இ தயாரித்து மத்திய மனித வள அமைச்சகத்தின் ஒப்புதல் பெற அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.