தில்லியில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை தில்லி அரசு செலுத்தும் பரிந்துரைக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்விற்கான கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி சமீபத்தில் சிபிஎஸ்இ உத்தரவிட்டிருந்தது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.
இந்நிலையில், சிபிஎஸ்இ-யின் இந்த திடீர் கட்டண உயர்வால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்னும் நோக்கில் 10, 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை செலுத்த தில்லி அரசு திட்டமிட்டிருந்தது.
அதற்கான பரிந்துரையும் தில்லி துணை முதல்வரும், கல்வித் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா சார்பில் அமைச்சரவையில் முன்மொழியப்பட்டது. அப்போது, இதன் மூலம் சுமார் 3.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் இதற்காக தில்லி அரசுக்கு ரூ. 57 கோடி செலவாகும் என்றும் தில்லி அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை தில்லி அரசே செலுத்தும் வகையில், தில்லி கல்வித் துறையின் பரிந்துரைக்கு அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கூடிய தில்லி அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications












