சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான மாற்றி அமைக்கப்பட்ட பாடத் திட்டம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது மத்திய பள்ளிக் கல்வி வாரியம்.
மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் நடத்தப்படும் 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கான 2015 - 2016 கல்வி ஆண்டின் திருத்திய பாடத் திட்டத்தை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
இதில் கூறப்பட்டுள்ள பாடத்திட்ட விவரங்களை வரும் கல்வி ஆண்டு முதல் பின்பற்ற வேண்டும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இந்த பாடத் திட்டங்கள் அனைத்தும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 9.10ம் வகுப்புக்கு ஒரு பிரிவாகவும், 11,12ம் வகுப்புக்கு ஒரு பிரிவாகவும் இணையத்தில் வெளியிட்டுள்ளது.
இணைய தளத்தில் பார்க்க விரும்புவோர் செகண்டரி ஸ்கூல் கரிக்குலம் 2015 - 16 என்றும், சீனிர் ஸ்கூல் கரிக்குலம் 2015 -16 என்றும் இணையத்தில் பதிவு செய்தால் தெரிந்து கொள்ளலாம். இது தவிர மேற்கண்ட பாடத்திட்டங்கள் புத்தகமாக அச்சிட்டு தனியாகவும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே அவற்றை தனியார் புத்தக நிலையங்களில் விலை கொடுத்தும் வாங்கிக்கொண்டு பள்ளிகள் அதன்படி பாடத்திட்டங்களை பின்பற்ற வேண்டும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
புதிய பாடத்திட்டம் பின்பற்றப்படுவது குறித்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தெரியும் வகையில் தகவல் பலகையில் பள்ளிகள் தெரிவிக்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.