சென்னை: மாணவிகள் உயர் கல்வி பெற உதவும் "உதான்" திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் 3 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் சேரும் வகையில் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் பயிற்சித் திட்டமாக உருவாக்கப்பட்டது "உதான்' திட்டம்.
மேல்நிலைப் பள்ளிகளில் படிப்பில் சிறந்து விளங்கும் ஏழை மாணவிகள் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., க்களில் சேருவதற்கான பயிற்சியை அளிக்கும் வகையில் "உதான்' என்ற திட்டம் செயல்படுகிறது. மத்திய அரசு அறிமுகம் செய்த இந்தத் திட்டம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மட்டுமல்லாமல், அனைத்து மாநில அரசுப் பள்ளிகளிலும் பிளஸ் 1 படிக்கும் மாணவிகள் 1,000 பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.
ஆன்-லைன் வழியாகவோ அல்லது நேரடியாகவோ சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சி புத்தகம், "டேப்லெட்' ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும். சந்தேகங்களைத் தெளிவுபடுத்த "ஹெல்ப் லைன்' வசதியும் ஏற்படுத்தப்படும்.
ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கு (ஜே.இ.இ.) விண்ணப்பிப்பது முதல் தேர்வு எழுதுவது வரை மாணவிகளுக்கு வழிகாட்டுதல் அளிக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவிகள் பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதோடு, கணிதம், அறிவியல் பாடங்களில் 80 சதவீத மதிப்பெண் பெற்றிருத்தல் அவசியம்.
மேலும் பிளஸ் 1 வகுப்பில் கணித, அறிவியல் பிரிவில் படித்து வரவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.cbse.nic.in என்ற இணையதளத்தை தொடர்புகொண்டு மாணவிகள் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.