சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு முடிவுகள் வெளியான சிறிது நேரத்தில் நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளை www.cbse.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். 10-ம் வகுப்பிலும் திருவனந்தபுரம் மண்டலமே தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதில் சென்னை மண்டலம் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நடத்தப்பட்ட 2023-24-ம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று பகல் 1 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்துள்ளனர்.
தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அதை இணையதளத்தில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வை நாடு முழுவதும் எழுதிய மாணவ, மாணவிகளில் 93.60 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தேர்வு முடிவுகளை www.cbse.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை டிஜி லாக்கர் மூலம் மாணவச் செல்வங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் சிபிஎஸ்இ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15 முதல் மார்ச் 13 வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 22.39 லட்சம் மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 93.60 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை காட்டிலும் தேர்ச்சி சதவிகிதம் 0.48% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிளஸ் 2 முடிவுகளைப் போலவே 10-வது தேர்வு முடிவுகளிலும் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது. அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.75% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விஜயவாடாவில் 99.60%, சென்னையில் 99.30% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை மாணவர்கள் 3-வது இடத்தைப் பிடித்துள்ளதால் அதிகாரிகளும், மாணவச் செல்வங்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சற்றுநேரத்துக்கு முன்னதாக 2023-24ஆம் கல்வியாண்டில் தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவ, மாணவிகளின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், நாடு முழுவதும் 87.98% சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 10-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதால் மாணவச் செல்வங்கள் அடுத்ததாக 11-ம் வகுப்பில் சேர்வதிலும், டிப்ளமோ படிப்புகளில் சேர்வதிலும், ஐடிஐ போன்ற தொழில் படிப்புகளிலும் சேர்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் 90 சதவீத மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பில் சேர்வதையே இலக்காகக் கொண்டுள்ளனர். இதற்காக தாங்கள் 10-ம் வகுப்புப் படித்து வந்த பள்ளியிலேயே பிளஸ் 1 படிப்புக்கான விண்ணப்பங்களைப் பெற்றுச் செல்கின்றனர். சிலர் வேறு பள்ளிகளில் மாறுவதற்காகக் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications












