கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு வரும் ஜூலை 1 முதல் 15 வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தியதால் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. அவற்றில் சிபிஎஸ்இ பள்ளியும் அடங்கும். இதன்காரணமாக, சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. பொது ஊரடங்கு முடிந்த பிறகு இதற்கான தேர்வுகள் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வரும் ஜூலை 1 முதல் 15ம் தேதி வரையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நடைபெறும் எனவும், இதற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், சிபிஎஸ்இ 1 ஆம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவர் எனவும், 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் உள்ள பருவமுறைத் தேர்வு, பயிற்சித் தேர்வு, செய்முறைத் தேர்வுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி செய்யப்படுவர் என ஏற்கனவே மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.