சிபிஎஸ்இ பாடத்திற்கு உட்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் மே மாதம் இத்தேர்வு தொடங்கப்பட உள்ளது என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2020 மார்ச் மாத இறுதி முதல் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. தொடர்ந்து, கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் ஒரு சில மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பதில் கால தாமதம் நிலவி வருகிறது.
இதனிடையே, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுமா என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் நிலவி வந்தது.
இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக தேர்வுகள் நடத்தப்படும் என்றும், அதுவும் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வந்துதான் தேர்வு எழுத முடிவும் என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
மேலும், சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வரும் மே 4-ம் தேதி தொடங்கி, ஜூன் 14ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூலை 15-ம் தேதியன்று வெளியாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.