கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் முழுமையாக மூடப்பட்ட நிலையில், படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், மீண்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிரடியான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனாவால் மூடப்பட்ட பள்ளிகள்
கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2020 மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. தொடர்ந்து, மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆன்லைன் வழியில் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
தேர்வுகள் ரத்து
கொரோனா வீரியம் அதிகளவில் இருந்ததால், பள்ளிகளைத் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்ட நிலையில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வுகள் இன்றி தேர்ச்சி பெறுவதாகத் தமிழக அரசு அதிரடி உத்தரவை அறிவித்தது. பொதுத் தேர்வுகள் மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று முடிந்தது.
சிபிஎஸ்இ தேர்வுகள்
தொடர்ந்து, சிபிஎஸ்இ மாணவர்களுக்கும் ஆன்லைன் வழியில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. முன்னதாக செய்முறைத் தேர்வுகளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது.
பாடத்திட்டத்தில் மாற்றம்
இதனிடையே, பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக, மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கும் வகையில் 30 சதவிகிதம் வரையில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நேரடியாக நடைபெறும் என்றும், அதற்காகத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.
சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை வெளியீடு
தொடர்ந்து, நடப்பு கல்வி ஆண்டிற்கான சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அட்டவணையை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார். அதில், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மே 4-ந்தேதி தொடங்கி ஜூன் 7-ந் தேதி வரையிலும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 4ம் தேதி தொடங்கி ஜூன் 11ம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மீண்டும் மூடப்படும் பள்ளிகள்
இந்த நிலையில், தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் மத்தியில் இந்நோய் வேகமாக பரவி வரும் நிலையில் குறிப்பிட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டு வருகின்றன. இதனால், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
9 முதல் 11 வரையில் ஆல்பாஸ்
மேலும், தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியதால் மாணவர்களின் நலன்கருதி 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றப்படுவர் என அறிவிக்கப்பட்டு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வுகளுக்கு பாதிப்பு
இந்த கல்வி ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி வருவதால் அவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள், ஆசிரியர் சங்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
மாணவர்களுக்கு உத்தரவு
இந்நிலையில், கடந்த ஆண்டு சிபிஎஸ்இ சார்பில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற செய்முறைத் தேர்வில் பங்கேற்க முடியாமல் போன மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துமாறு சிபிஎஸ்சி உத்தரவிட்டிருந்தது. தற்போது, கடந்த ஆண்டில் நடைபெற்ற சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் பங்கேற்காத 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 11-ம் தேதிக்குள் மறுதேர்வு நடத்திமுடிக்க சிபிஎஸ்இ நிர்வாகம் உத்தரவிட்டது.
சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு
இந்த நிலையில், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், ஜூன் 1ம் தேதியன்று ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு 12ம் வகுப்பிற்கான தேர்வு தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












