சென்னை: கலை அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக பணியாற்றுவதற்கான நெட் தேர்வு ஜூன் மாதம் நடக்க இருக்கிறது. இதையடுத்து இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக் கழங்களில் உதவி பேராசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால் நெட் தகுதித் தேர்வு எழுத வேண்டும். இதற்கான நெட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் யுஜிசி நடத்தி வருகிறது. அப்படி நடத்தும் போது பல்கலைக் கழக அளவில் உள்ள கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைப்பாளராக நியமித்து அவர்கள் தேர்வு நடத்த வேண்டும் என்று யுஜிசி அறிவிக்கும். இதுவரை தமிழகத்தில் சென்னைப் பல்கலைக் கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம் உள்ளிட்டவை ஒருங்கிணைப்பாளராக இருந்து நெட் தேர்வுகளை நடத்தியுள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நெட் தேர்வை சிபிஎஸ்இ நடத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து சிபிஎஸ்இ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நெட் தேர்வு ஜூன் மாதம் 28ம் தேதி நடக்கும் என்றும், இன்று முதல் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. பொருளாதாரம், அரசியல் அறிவியல், சமூகவியல், தமிழ், கன்னடம், மலையாளம், பஞ்சாபி உள்ளிட்ட 84 பாடத் தலைப்புகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண் எடுத்தவர்கள் இந்த தேர்வு எழுத தகுதியுடைவர்கள். தேர்வுக்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும். நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கி மே மாதம் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications












