சென்னை: கற்றலில் புதுமையை புகுத்தி சாதனை படைத்த ஆசிரியர்களுக்கு தேசிய அளவில் விருதுகள் வழங்க மத்திய பள்ளிக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி தேசிய அளவில் 87 பேருக்கு விருதுகள் கிடைக்கும்.
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படும் ஆரம்ப பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளி உள்ளிட்ட அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.
பெரிய மாநிலங்களுக்கு தலா 3 விருதுகள் வீதம் 39 விருதுகளும், சிறிய மாநிலங்களாக இருந்தால் அவற்றுக்கு தலா 2 விருதுகள் வீதம் 30 விருதுகளும், யூனியன் பிரதேசங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு விருது வீதம் 7 விருதுகளும், கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளுக்கு தலா 2 விருதுகள் வீதம் 4 விருதுகளும், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு 3 விருதுகளும், சிஐஎஸ்சிஇ பள்ளிகள், சிடிஎஸ்ஏ, சைனிக் பள்ளி, ஏஇஇஎஸ் பள்ளிகளுக்கு தலா 1 விருதும் வழங்கப்பட உள்ளன.
இந்த விருதில் கற்றல் உபகரணங்கள் கொண்ட தொகுப்பும், லேப்டாப், விருது சான்று, ஆகியவை வழங்கப்படும். இதைடுத்து அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறைகளும் கற்றலில் புதிய நுட்பத்தை புகுத்திய ஆசிரியர்களை தேர்வு செய்து வருகின்றன. கல்வி அதிகாரிகளுக்கு வேண்டியவர்களை மட்டுமே இந்த விருதுக்கு தேர்வு செய்வதாக ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.