சென்னை: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த "ரிசல்ட் நாளை வெளியாகும்" என்ற அறிவிப்பு திடீரென்று நீக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகத்திலிருந்து ஒரு லட்சம் பேர் எழுதியுள்ளனர்.
ஏற்கனவே நேற்று சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் தன்னுடைய இணையதளத்தில் இன்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று மாலை அந்த அறிவிப்பை தன்னுடைய இணையதளப் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. எனினும், அதற்கான காரணம் வெளியிடப்படவில்லை. நாளை மறுநாள் 28 ஆம் தேதியன்று முடிவுகள் வெளியிடப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பிளஸ் 2 தேர்வின் முடிவுகளே தாமதமாக வெளியாகிய நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியும் தள்ளிப் போய் உள்ளது.