சென்னை: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வு எழுத இனி இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வரும் 2016 மார்ச் மாதம் நடைபெற உள்ள தனித் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், சிபிஎஸ்இ அமைப்பின் இணையதளமான www.cbse.nic.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோன்று, இந்தப் பொதுத் தேர்வுகளில் தங்களது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ள (இம்ப்ரூவ்மெண்ட்) விரும்புவோரும் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தனித் தேர்வர்கள் தங்களது தேர்வுக் கட்டணத்தை இ-செலான் மூலம் செலுத்த வேண்டும்.
தாமதக் கட்டணம் இன்றி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 15 ஆகும். இணையம் மூலம் விண்ணப்பிப்பது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1800-11-8002 என்ற எண்ணை காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரை மாணவர்கள் தொடர்புகொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளின் மூலம் 2016 மார்ச்சில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்யும் பணி செப்டம்பர் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பள்ளிகளின் மூலமாக இந்த விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.