பள்ளி அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனவும், மீறினால் தொடர்புடையப் பள்ளியின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தொடக்கக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பழனிசாமி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு, நகராட்சி, தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை மற்றும் பிரைமரி உள்ளிட்ட பள்ளிகளுக்கு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரையில் அரையாண்டுத் தோ்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளி விடுமுறை நாட்களானது மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஏதுவாக அமைய வேண்டும். மேலும் இந்த விடுமுறை நாட்களில் மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் விளையாடி புத்துணர்ச்சி பெறுவதாக அமைய வேண்டும்.
இந்நிலையில், சில தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக இயக்குநரின் கவனத்துக்குப் புகார் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனவே அரையாண்டு விடுமுறை நாட்களில் எக்காரணத்தைக் கொண்டும் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் பிரைமரிப் பள்ளிகளுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவது கண்டறியப்பட்டால் அந்தப் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.