சென்னை, மார்ச் 3: பொதுத் தேர்வில் பங்கேற்கும் பார்வையற்ற மாணவர்களுக்கு தகுதியான எழுத்தர்களை நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு 3 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளி கோவிந்த கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேற்கண்ட வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த பெது நல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் பார்வையற்ற, மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்கின்றனர். அப்போது அவர்கள் தேர்வு எழுத வசதியாக எழுத்தர்களை தேர்வுத் துறை நியமிக்கும். அந்த எழுத்தர்கள், தேர்வில் இடம் பெறும் கேள்வித்தாளில் உள்ள கேள்விகளை படித்துக் காட்டுவார். அதற்கு மாணவர்கள் தெரிவிக்கும் பதில்களை விடைத்தாளில் மாணவர்களுக்கு பதிலாக எழுதுவார்கள். இதற்காக பார்வையற்ற மாணவர்களுக்கு தேர்வில் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும்.
கணக்கு, அறிவியல் உள்ளிட்ட முக்கிய பாடங்களில் இடம் பெறும் கேள்விக்கு விடை அளிக்கும் போது அடையாளங்கள், குறியீடுகள் அதிகம் பயன்படுத்தி விடை எழுத வேண்டிய நிலை உள்ளது. பார்வையற்ற மாணவர்கள் அதை சொல்லும்போது எழுத்தர்கள் அது குறித்து அறிந்திருந்தால் மட்டுமே விடையை சரியாக எழுத முடியும். அதனால் எழுத்தர்கள் திறமையானவர்களாக இருக்க வேண்டும். மொழிப் பாடங்கள் எழுதும் போது அந்த மொழிகள் குறித்த கூடுதல் அறிவு இருந்தால் மட்டுமே விடை எழுத முடியும்.
அப்படி இல்லை என்றால் பார்வையற்ற மாணவர்களால் ஒவ்வொரு குறியீடுகளையும் எழுத்தர்களுக்கு விளக்கம் அளிக்க முடியாது. நேரம் அதிகமாகிவிடும். தகுதியற்ற எழுத்தர்களை பயன்படுத்தினால அவர்கள் தவறான குறியீடுகளை அடையாளங்களை பயன்படுத்திவிட்டால் மாணவர்களுக்கு மதிப்பெண் குறையும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான எழுத்து தேர்வு நடத்துவது குறித்து மத்திய சமூல நல அமைச்சகம்கடந்த 2013ம் ஆண்டு வழிமுறைகள் தொடர்பான குறிப்பாணையை வெளியிட்டுள்ளது. அதில் 40 சதவீதம் அல்லது அதற்கு மேல் பாதிப்புள்ளவர்களுக்கு கண்டிப்பாக எழுத்தாளர், வாசிப்பாளர்களை நியமிக்க வேண்டும். தேர்வு எழுதுவோரை பொருத்து எழுத்தர்களை அனுமதிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு முதல் நாள் எழுத்தரை சந்திப்பதற்கு அனுமதிக்க வேண்டும். என்று குறிப்பாணையில் உள்ளது இது அனைத்து மாநில் அரசுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தவில்லை.
எனவே அந்த குறிப்பாணையை பின்பற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உயர்நீதி மன்ற முதன்மை பெஞ்ச், 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications












