ஆசிரியர் தேர்வு வாரியம் முதன்முறையாகக் கணினி வழியில் இந்த தேர்வை நடத்தியது. அரசுப் பள்ளிகளில் 814 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்காக நடைபெற்ற இத்தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, தேர்வர்கள் செல்போன் பயன்படுத்தியும், ஒருவருக்கொருவர் விவாதித்தும் தேர்வெழுதியிருக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணினி முதுகலை ஆசிரியர் தேர்வு
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கணினி முதுகலை ஆசிரியர் தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் 119 மையங்களில் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. ஆசிரியர் தேர்வு வாரியம் முதன்முறையாகக் கணினி வழியில் இந்த தேர்வை நடத்திய நிலையில், மதுரையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் கல்லூரியில் தேர்வு எழுத அறைகள் ஒதுக்கப்படாததால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
முற்றுகைப் போராட்டம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தேர்வர்கள், கல்லூரி நிர்வாகத்தினரைக் கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதேபோன்று நாமக்கல், திருவண்ணாமலை, நாகை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் தேர்வு எழுத இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வேறு ஒரு நாளில் தேர்வு
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணங்களால் தேர்வு எழுத முடியாத தேர்வர்களுக்கு வேறு ஒரு நாளில் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வினை முழுமையாக நிறைவு செய்யாதவர்களுக்கும் இது பொருந்தும் என்பதால் தேர்வர்கள் அச்சப்படத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுஞ்செய்தி வரும்
மறு தேர்வு நடைபெறும் நாள் குறித்த விபரங்கள் தேர்வர்களுக்குக் குறுஞ்செய்தி வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.
வெளியான குளறுபடிகள்
இதனிடையே ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இத்தேர்வில் பல்வேறு இடங்களில் குளறுபடி நடைபெற்றுள்ளதாகப் புகார்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தனியார் தேர்வு மையங்களில் கும்பலாகச் சேர்ந்து தேர்வெழுதும் அதிர்ச்சி வீடியோ ஒன்றும் வெளியானது.
ஆசிரியர் தேர்வில் செல்போன்
அந்த வீடியோவில் தேர்வு மையங்களுக்குள் செல்போன்களுடன் தேர்வர்கள் சென்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தேர்வறையில் பெற்றோர்கள்
நாமக்கல் மாவட்டம், திருக்செங்கோட்டில் தனியார் கல்லூரி ஒன்றில் தேர்வு அறையில் தேர்வர்கள் கும்பலாக நின்று உரையாடிக் கொண்டிருப்பதும், பெற்றோர்களும் தேர்வர்களுடன் அமர்ந்துகொண்டிருப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. தேர்வர் ஒருவர் பதிவு செய்துள்ள அந்த வீடியோவில் பலர் செல்போன்களைப் பார்த்து தேர்வெழுதும் அதிர்ச்சிக் காட்சிகளும் அதில் வெளியாகியுள்ளது.
கண்காணிக்க வேண்டும்
தனியார் தேர்வு மையங்களில் நடைபெறும் அரசுத் தேர்வின் போது சிசிடிவி கேமரா மூலம் தேர்வுகளைக் கண்காணிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், தேர்வறைக்குள் கண்காணிப்பாளர் இல்லாமலும், தேர்வர்கள் ஒருவருக்கொருவர் விவாதித்தபடியே தேர்வெழுதுவதும் நடைபெற்றுள்ளது.
கணினி கோளாறு
மேலும், பல தேர்வு மையங்களில் கணினி கோளாறு காரணமாகத் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தேர்வர்கள் அப்படியே விட்டுவிட்டு வெளியேறியும் உள்ளனர். தேர்வெழுத முடியாமல் போனவர்களுக்கு மறுதேர்வு என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்
தேர்வுக்கு பதிவு செய்திருந்த 30,833 தேர்வர்களில் 4000 பேர் தேர்வெழுதவில்லை. இதனைத் தொடர்ந்து கணினி ஆசிரியர் (முதுநிலை நிலை) கணினி வழித்தேர்வு முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் தனிப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.