சென்னை: ஆசிரியர்களுக்கான நடத்தப்படவுள்ள இடமாறுதல் கவுன்சிலிங் தொடர்பான தமிழக அரசின் புதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் போர்க்கொடி தூக்கியுள்ளது.
இதுதொடர்பாக திருவாரூர் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற கழகத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை ஆசிரியர் கழக நிர்வாகிகள் இயற்றியுள்ளனர்.
சமீபத்தில் ஒரு ஆசிரியர் ஒரு பள்ளியில் குறைந்தது 3 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால்தான் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்கவேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
இது அனைத்து ஆசிரியர் பெருமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனவே இந்த அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் போர்க்கொடி தூக்கியுள்ளது.
பொதுக்குழுக் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:
* நடப்புக் கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க ஒரு ஆசிரியர் ஒரு பள்ளியில் குறைந்தது 3 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டுமென்று தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
* ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கில் ஏற்கெனவே இருந்த நடைமுறையை அமல்படுத்த அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
* பொது இடமாறுதல் கவுன்சிலிங் ஒளிவு மறைவின்றி குழப்பமின்றி தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை நடத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கழகத்தின் மாவட்டத் தலைவர் ஆ. நடராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் செயலர் தி. தியாகராஜன், மாவட்ட பிரசாரச் செயலர் இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Click it and Unblock the Notifications












