சென்னை: சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வழங்கும் 2015 ஆம் ஆண்டுக்கான ராமானுஜன் பரிசுக்கு கனடாவை சேர்ந்த பேராசிரியர் ஜேக்கப் சிமேர்மான் தேர்வு செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எண் கணிதக் கோட்பாட்டில் முற்றிலும் மாறுபட்ட புதுமையான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர் கனடா நாட்டின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் ஜேக்கப் சிமேர்மான்.
இவர் புகழ்வாய்ந்த ஆண்ட்ரே-ஊர்ட் இணைப்புக் கோட்பாட்டில் குறிப்பிடத்தக்க சாதனையைப் புரிந்துள்ளார். அதனால்தான் இவர் இந்த ஆண்டின் சாஸ்த்ரா பல்கலை ராமானுஜன் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் ராமானுஜன் பரிசுதான் முதன் முதலில் அவருக்குக் கிடைத்த உலகளாவிய பெரும் பரிசு. இந்தப் பரிசு சிமேர்மானுக்கு வரும் டிசம்பர் 21,22 ஆம் தேதிகளில் கும்பகோணத்தில் நடைபெறவுள்ள எண்ணியல் கோட்பாட்டுப் பன்னாட்டுக் கருத்தரங்கில் வழங்கப்படவுள்ளது. இந்த பரிசு 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மற்றும் சான்றிதழ் ஆகியவை அடங்கியது.
கடந்த 2005 முதல் சாஸ்த்ரா ராமானுஜன் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இது கணிதமேதை ராமானுஜன் நினைவாக வழங்கப்பட்டு வருகிறது. கணிதத்தில் ஈடுபாடு கொண்ட கணிதப் பரப்பில் சாதனை படைக்கும் இளம் கணிதவியல் வல்லுநர்களுக்கு ஆண்டுதோறும் இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.