சென்னை: பல்கலைக்கழக மானியக்குழுவின் (யூஜிசி) விதிமுறைகளுக்கு முரணாக உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக நெட்-ஸ்லெட் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் செயலர் ஏ.ஆர். நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டாக தெரிவித்ததாவது:
ஆசிரியர் தேர்வு வாரியம், பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகள் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் உத்தரவுகளை மீறி உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவறானது. மேலும் சட்டத்தை மீறி இவ்வாறு அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே 2013-ல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நேரடி நியமன அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, ஜூலை 15ஆம் தேதி முதல் வழங்கப்பட்ட அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி நியமன ஆணைகளை திரும்பப் பெற வேண்டும். அனைத்துக் கல்லூரிகளுக்கும் பாரபட்சமின்றி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
2009-ஆம் ஆண்டு முதல் உதவிப் பேராசிரியர் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களின் கல்வித் தகுதி பல்கலைக்கழக மானியக் குழுவின் நெறிமுறைகள் 2009-ன்படி அமைந்துள்ளதா என்பதை விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Click it and Unblock the Notifications












