கல்வி நிறுவனங்களில் தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபடுதல், கல்லூரி வளாகத்தில் விதிமுறைகளை மீறி செயல்படும் மாணவர்களின் பட்டம் ரத்து செய்யப்படுவது வாடிக்கைதான். ஆனால், தற்போது ஒரு பல்கலைக் கழகம் புதிய சட்டத்தினை அமல்படுத்தி, அதனை மீறுவோரின் டிகிரி ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, சமூக அக்கறை கொண்டு அப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பெற்றோர்கள் மத்தியிலும், பெண்கள் மத்தியிலும் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.
வரதட்சணை கொடுமைகள்
நாடு முழுவதும் ஆங்காங்கே வரதட்சணை கொடுமையால் உயிரிழப்புகள் நடப்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுபோன்ற சம்பவங்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கோழிக்கோடு பல்கலைக்கழக நிர்வாகம் புதிய முயற்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளது.
உறுதி மொழி பத்திரம்
கேரள மாநிலம், கோழிக்கோடு பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் வரதட்சணை பெற மாட்டேன் என உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும் என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெற்றோர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்கலை
வரதட்சணைக்கு எதிராக பெண்கள் அமைப்புகளும், முற்போக்கு அமைப்புகளும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் போதிலும் அது முழுமையாக மக்களைச் சென்றடையவில்லை. இந்த நிலையில் தான் இப்பல்கலைக் கழக நிர்வாகம் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளது.
துணை வேந்தர்களுக்கு உத்தரவு
கேரள ஆளுநர் சையது ஆரிஃப் கான், பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் வரதட்சணை ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத் துணை வேந்தர்களைக் கேட்டுக்கொண்டார். அதன்படி கோழிக்கோடு பல்கலைக்கழக நிர்வாகம், வரதட்சணை வாங்க மாட்டேன் என்று உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டுக் கொடுப்பவர்களுக்கு மட்டுமே கல்லூரிப் படிப்புக்கான சீட் வழங்கப்படும் என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மீறினால் டிகிரி ரத்து
சட்டப்படி பல்கலைக் கழகத்தில் கொடுத்துள்ள உறுதிமொழி பத்திரத்தை மீறும் வகையில் யாரேனும் செயல்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் பல்கலைக் கழகத்தைத் தொடர்பு கொண்டு இச்செயலில் ஈடுபட்டவர்களின் கல்வியாண்டு உள்ளிட்ட விவரத்தைக் கூறி அவர் கையெழுத்திட்டுக் கொடுத்திருந்த உறுதிமொழி பத்திரம் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.