அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனமான போயிங், தன் நிறுவனத்தில் பணியாற்றும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் போயிங். உலக அளவில் இந்நிறுவனம் இரண்டாவது பெரிய விமான உற்பத்தி நிறுவனமாகும். மேலும், அமெரிக்காவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் நிறுவனம் போயிங் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொரொனா நோய் தொற்றின் காரணமாக அமெரிக்காவில் பெருமளவு போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், விமான சேவை நிறுவனங்கள் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில், தற்போது போயிங் நிறுவனம் 6,770 பேரை பணி நீக்கம் செய்வதாகவும், மேலும் வரவிருக்கும் வாரங்களில் ஊழியர்கள் தானாக முன்வந்து பணியை விட்டு வெளியேறுவதற்கான சலுகைகளையும் இந்நிறுவனம் வழங்கியுள்ளதாகவும், இதன் மூலம் மேலும், 5,520 ஊழியர்களை குறைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
உலக அளவில் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் ஊழியர்களுடன் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், தனது பணியாளர்களில் 10 சதவீதம் பேரை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. எனவே, வரும் ஒரு சில நாட்களில் இன்னும் சில ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.