5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில் இருந்து மூன்று ஆண்டுகள் விலக்களிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தேர்வு நடைபெறும் என்றும் மாணவர்கள் தோல்வியடைய மாட்டார்கள் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளைப் போலவே 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அடுத்த 3 ஆண்டுகளுக்கு 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். மேலும், இந்தத் திட்டத்தினை மத்திய அரசு கொண்டு வருவதாகவும், ஆனால், தமிழகத்துக்கு விலக்கு பெறப்பட்டுள்ளது என்னும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும். ஆனால், அதில் மாணவர்கள் யாரும் தோல்வியடைய மாட்டார்கள் என்று புதிய அறிவிப்பை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 19ம் தேதியன்று (நேற்று) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் 5, 8 வகுப்புகளுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வு உண்டு. ஆனால், பெயில் கிடையாது. இந்த 3 ஆண்டுகளில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்காகவே விலக்கு வாங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், 11, 12ம் வகுப்பு கேள்வித்தாள் வெளியான விவகாரம் குறித்து பேசிய செங்கோட்டையன், பிளஸ் 1, பிளஸ் 2 காலாண்டுத் தேர்வுகள் சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவை அனைத்தும் முந்தைய தேர்வுகளின் வினாத்தாள்கள் என தெரிவித்தார்.