ஏழை, எளிய மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளதாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் சங்கம் சார்பில் பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள நீட் அபாயம் நீங்கிவிட்டதா? என்னும் நூல் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் பங்கேற்று நூலை வெளியிட்டதோடு சிறப்புறையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், நீட் தேர்வினால் உருவாகும் மருத்துவர்கள் தற்போதுள்ள மருத்துவர்களைப் போல் சேவை மனப்பான்மையோடு இருக்க மாட்டார்கள்.
நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் மூலம் கல்வி வணிகமாக்கப்படுகிறது. கல்வியைத் தனியாரிடம் ஒப்படைத்ததற்கும் நீட் தேர்வைக் கொண்டு வருவதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
ஏழை மாணவர்கள் கல்வியில் சாதனை செய்வதை முறியடிக்கும் வகையில் கல்வி தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. தனியாருக்குக் கல்வியை ஒப்படைத்து வழங்கிய நீதிமன்றத் தீர்ப்பானது என்னை மிகவும் பாதிப்படையச் செய்தது. கல்வியை அரசு முழுவதுமாக கையில் எடுத்தாலே நீட் தேர்வுக்கான அவசியம் நீங்கும்.
மத்திய அரசின் நீட் தேர்மானது ஏழை, எளிய மக்களின் கல்வியையும், மாநில உரிமையையும் தட்டிப் பறிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.