சென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூரிலுள்ள ஜெயின், கிறிஸ்து பல்கலைக்கழகங்களுக்கு பி கிரேடு அந்தஸ்தை தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (நாக்) வழங்கியுள்ளது.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் கல்வித் தரம், மாணவர் சேர்க்கை, தேர்ச்சித் திறன், ஆசிரியர் திறன், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தரமதிப்பீடு செய்து வரும் தன்னாட்சி நிறுவனமாகும் நாக். பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) கீழ் இது இயங்கி வருகிறது.
தரமதிப்பீட்டை ஏ, பி, சி கிரேடுகள் என பிரித்து வழங்கி வருகிறது நாக். இந்த ஆண்டு கர்நாடகத்திலுள்ள ஜெயின், கிறிஸ்து பல்கலைக்கழகங்களுக்கு பி கிரேடு அந்தஸை நாக் வழங்கியுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற நாக்-கின் 71-வது செயற்குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் 17 பல்கலைக்கழகங்களுக்கு ஏ கிரேடு, 20 பல்கலைக்கழகங்களுக்கு பி கிரேடு, ஒரு பல்கலைக்கழகத்துக்கு சி கிரேடு அந்தஸ்தை நாக் வழங்கியுள்ளது.
ஆனால் ஜெயின், கிறிஸ்து பல்கலைக்கழகங்களுக்கு பி கிரேடு அந்தஸ்தை நாக் வழங்கியுள்ளதால் அந்த பல்கலைக்கழகங்கள் அதிருப்தியில் உள்ளன. இதைத் தொடர்ந்து மீண்டும் மதிப்பீடு செய்யுமாறு நாக்-கிடம் அவை விண்ணப்பம் செய்யவுள்ளன.
நாக்-கின் தர மதிப்பீட்டைக் கருத்தில் கொண்டு அந்த பல்கலைக்கழகங்களுக்கு நிதி உள்ளிட்டவைக் கிடைக்கும்.
மேலும் கேம்பஸ் தேர்வுக்கு நிறுவனங்கள் வருதல் உள்ளிட்ட பல விஷயங்களும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.