சென்னை: பி.எட். படிப்பில் சேர பி.இ. பட்டதாரிகள் ஆர்வமாக உள்ளனர். பி.எட் படிப்பில் சேர்வதற்கு 1,136 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு முதல் பி.எட், எம். எட் படிப்புகள் இரண்டாண்டுகள் பயிலவேண்டும் என்ற உத்தரவு வந்துள்ளதையடுத்து மாணவர் சேர்க்கைக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 2015-16-ம் கல்வியாண்டில் மாணவர்கள் பி.எட் படிப்பில் சேர ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக பி.இ. படித்த பட்டதாரிகள் பி.எட் படிப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பி.எட். படிப்பில் பி.இ. பட்டதாரிகள் சேர்க்கப்படுவது இந்தியாவில் இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் (என்.சி.டி.இ.) புதிய 2014 வழிகாட்டுதலின்படி, பி.இ. முடித்தவர்கள் முதன் முறையாக பி.எட். படிப்புகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
என்.சி.டி.இ, வழிகாட்டுதலின் அடிப்படையில் பொறியியல் படிப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களைத் துணைப் பாடமாக எடுத்துப் படித்தவர்கள் பி.எட். படிப்பில் சேரலாம் என தமிழக அரசும் அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, 2015-16 பி.எட். மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு நடத்தும் சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் பி.இ. முடித்தவர்களிடமிருந்தும் விண்ணப்பங்களைப் பெற்றது.
அதன் மூலம், பி.எட். சேர்க்கைக்கு மொத்தம் விண்ணப்பித்த 7,425 பேரில், 1,136 பேர் பொறியியல் பட்டதாரிகள் என்பது தெரியவந்துள்ளது.