சென்னை: பி.இ. படிப்புகளில் பொதுப் பிரிவுகளில் சேர்க்கைப் பெறுவதற்கான கவுன்சிலிங் நாளை(ஜூலை 1) தொடங்கவுள்ளது.
தமிழகத்திலுள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் பி.இ. உள்ளிட்ட படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேர்வதற்கான கவுன்சிலிங்கை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. ஜூன் 28 முதல் தொடர்ந்து இந்த கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் விளையாட்டுப் பிரிவினருக்கும், இரண்டாம் நாளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
நேற்று நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங்குக்கு 219 மாற்றுத்திறனாளிகள் அழைக்கப்பட்டனர். அவர்களில் 200-க்கும் குறைவானவர்களே இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மீதமுள்ள 4,900-க்கும் அதிகமான இடங்கள், பொதுப் பிரிவு கலந்தாய்வு இடங்களில் சேர்க்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடங்கவுள்ளது.
முதல் நாளில் பொறியியல் கட்-ஆஃப் 200-க்கு 200 எடுத்தவர்கள் முதல் 198.25 கட்-ஆஃப் வரை எடுத்தவர்களுக்காக கலந்தாய்வு நடைபெறும்.