சென்னை: தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக அரசு சித்த மருத்துவ மருந்தாளுநர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புமாறு தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவத்தில் 130-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 2007-ஆம் ஆண்டிலிருந்தே இந்த பணியிடங்கள் காலியாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதை நிரப்புவதற்கு அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் இந்த காலியான இடங்களை நிரப்புமாறு இந்தியமுறை- ஹோமியோபதி இயக்கக ஆணையரிடம் தமிழ்நாடு இந்தியமுறை மருந்தாளுநர் சங்கத்தினர் கோரிக்கை மனுவை வழங்கினர்.
காலியான பணியிடங்களை நிரப்பவேண்டும். இந்தத் துறை மருந்தாளுநர்களுக்கு அலோபதி முறையில் உள்ளது போன்று மருந்து ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். மாவட்டத்துக்கு ஒரு மருந்து ஆய்வாளரை நியமிப்பதன் மூலம் போலி மருந்துகள் பயன்பாடு, தரமற்ற மருந்துகளை தயாரித்தல் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த முடியும்.
மேலும் இந்திய முறை மருத்துவத்தில் மருந்தாளுநர் பட்டயப் படிப்பு மட்டுமே உள்ளது. மருந்தாளுநர்களுக்கான பட்டப் படிப்பை தொடங்க வேண்டும்.
நிர்வாகக் காரணத்தினால் இடமாறுதல் என்ற கொள்கையில் இடமாறுதல் அளிக்கக் கூடாது. முறையாக இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகள் அடங்கிய அந்த மனுவில் இடம்பெற்றிருந்தன.
கோரிக்கை மனுவை வழங்கிய பின்னர் சங்கத்தின் இணைச் செயலாளர் பாலகுமார் கூறியதாவது: காலி பணியிடங்களை நிரப்பக் கோரி சுமார் 80 பேர் நேரில் சென்று ஆணையரிடம் மனுவை வழங்கினோம்.
ஆனால் எங்கள் கோரிக்கைகளுக்கு முறையான பதில் எதையும் அளிக்கவில்லை. எனவே சங்கத்தினருடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்டமாக பல்வேறு போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications












