சென்னை: மார்ச் 20: தொழில் கல்வி தொடர்பான பட்டப் படிப்புகளை நடத்துவது தொடர்பாக யுஜிசி வெளியிட்ட அறிவிப்பை ஏற்று 127 சமூக கல்லூரிகள் இளநிலை தொழில் கல்வி பட்டப் படிப்பை நடத்த யுஜிசியிடம் அனுமதி பெற்றுள்ளன.
பல்கலைக் கழக மானியக் குழுவின்(யுஜிசி) சார்பில் இரண்டு வகையான பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்யப்பட்டது. ஒன்று, கல்லூரிகளில் இளநிலை தொழில் கல்விக்கான பட்டப்படிப்பு. மற்றொன்று தீன் தயாள் உபாத்யாயா கவுஷல் கேந்திரா என்ற பெயரில் ஆராய்ச்சி சார்ந்த சான்றிதழ் படிப்பு.
மேற்கண்ட இரண்டு படிப்புகளில் இளநிலை தொழில் பட்டப்படிப்புகளை சமூக கல்லூரிகளில் நடத்த வாய்ப்பு அளிக்கப்படும் என்று யுஜிசி அறிவித்து இருந்தது. நாட்டில் இயங்கும் 157 சமூக கல்லூரிகளில் 127 கல்லூரிகள் இளநிலை தொழில் கல்வி பட்டப் படிப்பை நடத்த அனுமதி கேட்டுள்ளன. 500 சமூக கல்லூரிகள் மூலம் 2014&2015 மற்றும் 2018&2019 வரை 50000 மாணவ மாணவியர் மேற்கண்ட ஆராய்ச்சி படிப்பை படிப்பார்கள் என்று யுஜிசி இலக்கு நிர்ணயித்துள்ளது.
அதேபோல 37500 மாணவ மாணவியர் இளநிலை தொழில் கல்வி பட்டப் படிப்பை படிப்பார்கள் என்றும் யுஜிசி கருதுகிறது. மேலும் 12வது திட்ட காலத்தில் 100 தீன்தயாள் உபாத்தியாயா கேந்திரங்களை உருவாக்கவும் யுஜிசி திட்டமிட்டுள்ளது. இது போன்ற கல்வியை வழங்க உள்ள சமூக கல்லூரிகள் மாணவர்களின் திறனை மேம்படுத்தவே இந்த வகை பாடங்களை நடத்த முடியும்.
தாங்களாகவே தனியாக தொழில் கல்வி சார்ந்த படிப்புகளை நடத்த முடியாது என்று யுஜிசி தெரிவித்துள்ளது.