சென்னை: நிர்வாகப் படிப்புகளைத் தரும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு தொடர்ந்து மவுசு அதிகரித்து வருகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு அதிக சம்பளத்தைத் தந்து தங்களது நிறுவனங்களில் பணியமர்த்த போட்டியிடும் நிலை இப்போதும் தொடர்கிறது.
இந்தியாவில் நிர்வாகப் படிப்புகளுக்காக ஐஐஎம் என்ற உயர்கல்வி நிறுவனங்களை மத்திய அரசு நடத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஏராளமான தனியார் கல்வி நிறுவனங்களும் உள்ளன.
கோழிக்கோடு ஐஐஎம், பெங்களூரு ஐஐஎம், டெல்லி ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு அதிக அளவில் சம்பளம் வெளியே காத்திருக்கிறது. கவர்ச்சிகரமான சம்பளத்தைக் கொடுத்து நிர்வாகக் கல்வி நிபுணர்களை தங்கள் பக்கம் இழுக்க நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன.
கடந்த ஆண்டில் கோழிக்கோடில் படித்த மாணவர்களில் 119 மாணவர்களுக்கு நல்ல சம்பளத்தைக் கொடுத்து பணியில் நிறுவனங்கள் அமர்த்தியுள்ளன. அந்த 119 மாணவர்களுக்கு 370 நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வந்தன.
அவர்களுக்கு சராசரி சம்பளம் ஆண்டுக்கு ரூ.18.1 லட்சம் என்ற அளவில் இருந்தது. அதிக சம்பளம் என்பது ஆண்டுக்கு ரூ.37 லட்சம் என்ற அளவில் இருந்தது.
இதேபோலவே டெல்லி ஐஐஎம் கல்வி நிறுவன மாணவர்களை தங்களது நிறுவனத்துக்கு இழுக்க போட்டா போட்டி நிலவியது. அவர்களுடைய சராசரி சம்பளமானது ரூ.14.9 லட்சம் என்ற அளவில் இருந்தது.
டெல்லி ஐஐஎம் மாணவர்களுக்கு ரூ.29 லட்சம் என்ற அளவில் சம்பள வாய்ப்புகளை வழங்கியதாக டெல்லி ஐஐஎம் பேராசிரியர்(பணியமர்த்துதல் துறை) மானஸ்வினி ஆச்சார்யா தெரிவித்தார்.