சென்னை: தனியார் கல்லூரிகளில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதுவரை 3,744 இடங்கள் காலியாக இருக்கின்றன.
பி.எஸ்.சி. செவிலியர், இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட 9 துணை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான (ஃப்ரீ சீட்) கவுன்சிலிங் நடைபெற்றது. முதல் 3 நாட்களில் இந்த இடங்கள் நிறைவடைந்துவிட்டன. மாணவ, மாணவிகள் முட்டி மோதி அந்த இடங்களைப் பெற்று அதற்கான அனுமதிக் கடிதத்தையும் பெற்றுச் சென்றுவிட்டனர்.
அரசுக் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் பூர்த்தியான நிலையில், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் தற்போது நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமையுடன் முடிந்த கவுன்சிலிங் வரை தற்போது 3,744 காலி இடங்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதில் பி.எஸ்சி. செவிலியர் 3008, பி.பார்ம் 384, இயன்முறை மருத்துவம் 324, ஆக்குபேஷனல் தெரப்பி 28 இடங்கள் காலியாக இருக்கின்றன.
இந்த கவுன்சிலிங் ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என்று தேர்வுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.