சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. அறிவியல் பட்டப் படிப்புகள் அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
2016-17 கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை பல்கலைக்கழகம் நடத்தும் என்று தெரியவந்துள்ளது.
இந்த பல்கலைக்கழகம் மூலம் விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல் தொடர்பான இளநிலை பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்படும். தொலைநிலைக் கல்வி வாயிலாக இந்தப் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன என்று தமிழக அரசின் உயர் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2015-16-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தப் படிப்புகளைத் தொலைநிலைக் கல்வி முறையில் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஏற்கெனவே செய்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரகாந்தி ஜெயபாலன் கூறியதாவது:
அறிவியல் பட்டப் படிப்புகளை அறிமுகம் செய்வதற்கு பல்கலைக்கழகத்தின் கல்வி வாரியக் குழு, ஆட்சிமன்றக் குழு ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்டு விட்டது.
இந்த அறிவியல் படிப்புகளில் இடம்பெறும் செய்முறை பயிற்சிகளை மாணவர்கள் நேரடியாக மேற்கொள்ள வசதியாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட கல்லூரிகளில் ஏற்பாடு செய்து தரப்படும். செய்முறைத் தேர்வையும் அந்தக் கல்லூரியிலேயே மாணவர்கள் மேற்கொள்ள வசதிகள் செய்யப்படும்.
இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications












