சென்னை: இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பு என்று அழைக்கப்படும் பி.எட். படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நேற்று தொடங்கியது. முதல் நாளில் கவுன்சிலிங்கின்போது சிறப்புப் பிரிவினருக்கும், கணிதப் பாடப் பிரிவினருக்குமான சேர்க்கை நடத்தப்பட்டு மாணவர்கள் பி.எட். படிப்பில் சேர்க்கப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள 1,777 இடங்களில் 2015-16-ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது.
முதல் கட்டமாக கவுன்சிலிங் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 5-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த 6 நாள் கவுன்சிலிங்கில் மொத்தமுள்ள இடங்களில் 1,000 இடங்கள் மட்டுமே நிரம்பின.
இந்த நிலையில் மீதமுள்ள 777 இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நேற்று தொடங்கியது. முதல் நாளில் சிறப்புப் பிரிவினருக்கும், கணிதப் பாடப் பிரிவினருக்குமான சேர்க்கை நடத்தப்பட்டது.
இதுகுறித்து பி.எட். சேர்க்கை செயலர் பாரதி கூறியதாவது:
இரண்டாம் கட்ட கவுன்சிலிங்குக்கு 2 ஆயிரம் பேர் வரை அழைக்கப்பட்டுள்ளனர்.
முதல் நாளில் சிறப்புப் பிரிவினர், கணிதப் பிரிவினருக்கான சேர்க்கையில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. மீதமுள்ள இடங்களுக்கு தொடர்ந்து அக்டோபர் 15, 16-ஆம் தேதிகளில் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும் என்றார் அவர்.