சென்னை: ஆசிரியர் பணியில் சேர உதவும் பி.எட். படிப்பில் சேர தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட். இடங்களில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த கவுன்சிலிங்கை சென்னையிலுள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தவள்ளது.
வரும் 28-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ஆம் தேதி வரை 6 நாள்கள் கவுன்சிலிங் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங்குக்காக 7,425 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நேற்று வெளியிட்டது.
இது குறித்து பி.எட். கவுன்சிலிங் செயலர் பாரதி கூறியதாவது:
பி.எட். சேர்க்கைக்கான குறைந்தபட்ச கட்-ஆஃப் மதிப்பெண் அண்மையில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு விண்ணப்பதாரருக்குமான தனிப்பட்ட கட்-ஆஃப் மதிப்பெண் வெளியிடப்பட்டது.
இந்த தனிப்பட்ட கட்-ஆஃப் தொடர்பில் (லிங்க்) விண்ணப்ப எண்ணை மாணவர்கள் பதிவு செய்தால் தங்களுடைய ரேங்க், கட்-ஆஃப், பாடம் உள்ளிட்ட விவரங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மொத்தம் 8 நாட்கள் கவுன்சிலிங் நடைபெறும்.
கவுன்சிலிங் தேதி தொடர்பான விவரங்கள், விண்ணப்பித்தவர்களுக்கு தபாலில் அனுப்பப்பபட்டுள்ளது. மேலும் அவர்கள் இதுதொடர்பான விவரங்களை இணையதளங்களிலும் பார்த்துக்கொள்ளலாம் என்றார் அவர்.