சென்னை: ஆசிரியர் பணியில் சேர உதவும் பி.எட். படிப்புக்கான கவுன்சிலிங் விண்ணப்ப விற்பனை முதல் நாளிலேயே 3 ஆயிரத்தைத் தாண்டி விற்பனையானது.
தமிழகத்தில் 2015-16-ம் கல்வியாண்டில் பி.எட்., எம்.எட் படிப்புகளில் சேர்வதற்கான கவுன்சிலிங் இந்த மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான கவுன்சிலிங்கை சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தவுள்ளது. அநேகமாக கவுன்சிலிங் செப்டம்பர் 4-ஆவது வாரத்தில் நடைபெறலாம் எனத் தெரிகிறது.
இந்த கவுன்சிலிங்குக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் 13 மையங்களில் நேற்று தொடங்கியது. செப்டம்பர் 10-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை "செயலர், தமிழ்நாடு பி.எட். சேர்க்கை 2015-16, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600005' என்ற முகவரிக்கு செப்டம்பர் 11 மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.
நேற்று நடைபெற்ற முதல் நாள் விற்பனையில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள 2 மையங்களில் விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவன மையத்தில் மட்டும் அதிகபட்சமாக 500 விண்ணப்பங்கள் விற்பனையானது.