பொறியியல் பயின்றவர்களுக்கான வேலை வாய்ப்புகள் சமீபகாலமாகக் குறைந்து வரும் நிலையில், தங்களது படிப்பிற்கு தொடர்பற்ற வேலைகளில் பட்டதாரி இளைஞர்கள் ஈடுபட்டு வருவதும் அதிகரித்து வருகிறது.

அவ்வாறு, பொறியியல் பயின்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் தமிழக சட்டசபையில் உள்ள துப்புரவு பணியிடங்களுக்கு விண்ணப்பித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலையில்லா பட்டதாரி
தமிழகத்தில் பொறியியல் துறை பயின்ற பெரும்பாலானோர் அடுத்தகட்டமான வேலை வாய்ப்புகள் குறித்து செய்வதறியாது திகைத்து வருகின்றனர். குறிப்பாக, ஏற்கனவே லட்சக் கணக்கான பட்டதாரிகள் முறையான வேலைவாய்ப்பின்றி உள்ள நிலையில் புதிதாக கல்லூரி முடித்து வெளிவருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
துப்புரவுப் பணியில் பொறியியல்
இந்த நிலையில், வேலை வாய்ப்பின்றி தவித்து வரும் ஆயிரக் கணக்கான பொறியியல் பட்டதாரிகள் சென்னையில் 14 துப்புரவு பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக, இளநிலை பொறியியல் மட்டுமின்றி எம்.டெக், எம்.சி.ஏ போன்ற உயர்கல்வி படித்தவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
பி.இ, எம்.சி.ஏ., எம்.டெக்
தமிழக சட்டசபை வளாகத்தில் காலியாக உள்ள துப்புரவு பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. மொத்தம் 14 துப்புரவு பணியிடங்களுக்கான அறிவிப்பைத் தொடர்ந்து சுமார் 4 ஆயிரத்து 607 பேர் விண்ணப்பித்தனர். இதில், பெரும்பாலாக விண்ணப்பித்தவர்கள் பி.இ, எம்.சி.ஏ., எம்.டெக் உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் தான்.
தகுதி நீக்கம்
இதனைத் தொடர்ந்து, விண்ணப்பங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் தகுதியில்லாத 677 விண்ணப்பத்தை நிராகரித்தனர். இதர 3,930 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்காக தமிழக சட்டசபை வளாகத்துக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டனர்.
15 ஆயிரம் ஊதியம்
துப்புரவு பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை துணை செயலர்கள் மேற்கொண்டனர். நாள் ஒன்றுக்கு 100 விண்ணப்பதாரர் என சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்குப் பின், தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் துப்புரவு பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.


Click it and Unblock the Notifications












