சென்னை: மருத்துவ பொது நுழைவுத் தேர்வால் (சிஇடி) எழுந்துள்ள பிரச்னை காரணமாக பி.இ. படிப்புக்கான கவுன்சிலிங் தள்ளிப் போகும் வாய்ப்புள்ளது என்று சென்னை அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இததன் காரணமாக பி.இ. காரணமாக பி.இ. கவுன்சிலிங்கை நடத்துவது தொடர்பாக தேர்தலுக்குப் பிறகே அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் ஆலோசித்து முடிவு செய்ய உள்ளனர்.
மருத்துவப் பொது நுழைவுத் தேர்வை இந்த ஆண்டே கட்டாயமாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு கட்டாயமாக்கப்பட்டுவிட்டால் பி.இ. சேர்க்கை ஒரு மாதம் தள்ளிப் போகும் என்று தெரிகிறது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தேசிய தகுதி காண் தேர்வை (என்.இ.இ.டி.) உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கியுள்ளது. இந்தத் தேர்வு நாடு முழுவதும் வரும் ஜூலை 24-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வு முடிவு ஆகஸ்ட் மாதத்தில்தான் வெளியிடப்படும்.
இந்த பொது நுழைவுத் தேர்வுக்கு தமிழகம் உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உச்ச நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்து நிகழ் கல்வியாண்டில் பழைய நடைமுறையின்படியே மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று சில மாநில அரசுகள் முறையிட்டுள்ளன.
இந்த நிலையில், இந்தப் பிரச்னை தொடர்பாக, தில்லியில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள், செர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் மூலம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு தீர்வு காணப்பட உள்ளது. பெரும்பாலும், நிகழாண்டில் மாணவர்களின் நலன் கருதி என்இஇடி நடத்தாமல், அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்வதற்கான முடிவே எடுக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை, என்.இ.இ.டி. தேர்வு நடப்பாண்டிலேயே கட்டாயமாக்கப்பட்டால், தமிழகத்தில் பொறியியல் சேர்க்கை ஒரு மாத காலம் அளவுக்கு தாமதமாகத் தொடங்கும் நிலை உருவாகும் என்று அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.