சென்னை: தமிழகத்தில் பி.இ. படிப்பில் (2016-17) மாணவர்களைச் சேர்க்க கவுன்சலிங் ஜூன் 24-ம் தேதி தொடங்குகிறது.
இந்த படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 22-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான சேர்க்கையை சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
தமிழகத்தில் நடப்பாண்டில்பொறியியல் சேர்க்கைக்காக ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் இணையவழி (ஆன்-லைன்) பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, படிவத்தைப் டவுன்லோடு செய்து தங்களது விவரங்களை மே 31 வரையில் 2.53 லட்சம் மாணவர்கள் பதிவு செய்தனர். இவர்களில் 1,34,722 பேர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர்.
இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் நிருபர்களிடம் கூறியது:
பி.இ. படிப்புகளுக்கான ரேண்டம் எண் பட்டியல் ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்படும். ஜூன் 22-ல் தரவரிசைப் பட்டியல் வெளியாகும்.
ஜூன் 24 முதல் கவுன்சலிங் நடைபெறும்.
24-ஆம் தேதி விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வும், 25-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வும் நடத்தப்படும். 27-ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கலந்தாய்வு எத்தனை நாள்கள் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
கவுன்சலிங் அழைப்புக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது. பெயர், பிறந்த தேதி, பொறியியல் சேர்க்கை பதிவு எண் ஆகியவற்றை ஆன்-லைனில் பதிவு செய்து அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றார் அவர்,


Click it and Unblock the Notifications












