சென்னை: தேசிய அளவிலான கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு உதவும் புதிய திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்துள்ளார்.
தேசிய தொழில் நுட்ப, அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலின் கூட்டம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில், தெலங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் நடைபெற்றது. அப்போது, அங்கு மாணவர்கள் குறை தீர் மையத்தை அவர் தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் விழாவில் பேசியதாவது:
மத்திய அரசின் தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனங்கள் மாணவர்களை மையப்படுத்திய கல்வி முறையை உருவாக்கி அமல்படுத்த வேண்டும். கல்வி குறித்த மாணவர்களின் குறைகளை குறிப்பிட்ட காலவரையறைக்குள் தீர்க்க வேண்டும்.
மாணவர்கள் குறை தீர் குழு ஒவ்வொரு தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திலும் செயல்படும். இந்தக் குழு மாணவர்களின் குறைகளைத் தீர்ப்பது குறித்து அந்தந்த நிறுவனத்தின் இயக்குநரோடு இணைந்து பணியாற்றிடும்.
மேலும் தேசியக் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களில், கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்காக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். படிப்பில் பின் தங்கும் மாணவர்களை முன்னேற்ற போதிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதன்படி அந்த மாணவர்களுக்கு நன்றாகப் படிக்கும் மாணவர் ஒருவர் வழிகாட்டியாகச் செயல்படுவார்.
வழிகாட்டி மாணவர்கள் சிறப்பாக செயல்படுவதை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் அவர்களுக்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஊக்கத்தொகை வழங்கும் என்றார் அவர்.