சென்னை: மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மீண்டும் கூடி நினைவுகளைப் பகிர்ந்துகொள்வது தற்போது அரிதாக இருக்கிறது.
இன்றைய பரபரப்பான உலகில் இதுபோன்ற நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வருகிறது.
கலிங்கா இன்ஸ்டிடியூட்
அதுபோன்ற நிகழ்ச்சி, பெங்களூர் மாகடி சாலை போலீஸ் காலனியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. ஒடிசா மாநிலம் கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் அண்ட் டெக்னாலஜி (KIIT), கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸஸ்(KISS) ஆகியவற்றின் நிறுவனர் டாக்டர் அச்சுதா சமந்தாவின் முயற்சியால் ஆர்ட் ஆஃப் கிவிங் (கொடுக்கும் கலை) அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
ஆர்ட் ஆஃப் கிவிங்
தாங்கள் பெற்றதை சமூகத்துக்கு மாணவர்கள் திரும்பித் தர அழைக்கும் அற்புத அமைப்பாகும் இது. மாணவச் செல்வங்கள் தாங்கள் பெற்ற கல்விச் செல்வத்தையோ அல்லது பொருள் ஈட்டியதையோ சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கு திரும்ப அளிப்பதை வலியுறுத்தும் அமைப்பாக ஆர்ட் ஆஃப் கிவிங் செயல்பட்டு வருகிறது.
31 ஆண்டுகளுக்குப் பின்னர்...
அதன்படி மாகடி சாலையிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 31 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் ஆசிரியர் தினத்தில் ஒன்று கூடினர். இவர்கள் அனைவரும் 1984-85-ம் ஆண்டில் இந்தப் பள்ளியில் படித்தவர்கள். இவர்கள் ஒன்று கூடி ஆசிரியர் தினத்தில் 23 ஆசிரியர்களை கௌரவித்தனர்.
ஆசிரியர்களுக்குப் பரிசு
அப்போது இவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களில் 7 பேரையும், இங்கு பணியாற்றி வரும் 16 பேரையும் இணைத்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர் மாணவர்கள்.
ராஜ்குமாரின் ஆசிரியர்
இதில் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் ராஜ்குமாருக்கு இசை ஆசிரியராக பணியாற்றி பரமசிவனும் ஒருவர். அவருக்கு 85 வயதாகிறது.
அவர் கூறியதாவது: 31 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு மாணவர்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இந்த மாணவர்களுக்கு இசையை பயிற்றுவித்தேன். ஆனால் இப்போது முன்னாள் மாணவர்களுடன் இணைந்திருப்பது என் காதில் இசையை மீட்டுகிறது என்றார் அவர்.
மாணவர்கள் மகிழ்ச்சி
ஆசிரியர்கள் மஞ்சுளா, ஆனேக்கல் லட்சுமி ஆகியோரும் மாணவர்களிடையே மிகுந்த சந்தோஷத்துடன் கலந்துரையாடினர்.
பழைய மாணவர்களைத் தேடிப்பிடித்து ஒன்றிணைத்துள்ளார் பசவராஜ் என்பவர். 31 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களை இணைத்தது பெரிய விஷயம்தான். இதுபோன்று ஆண்டுதோறும் நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஆர்ட் ஆஃப் கிவிங் அமைப்பினருக்கும் என்து நன்றி என்றார் பசவராஜ். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் மிகவும் பரவசத்துடன் காணப்பட்டனர்.