சென்னை: தருமபுரி நகரில் வரும் ஜூலை 22-ம் தேதி ராணுவத்துக்கு ஆள்தேர்வு முகாம் தொடங்க உள்ளது.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ராணுவத்துக்கு ஆள்தேர்வு முகாம் ஜூலை 22-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி நடைபெற உள்ளது.
இதில், ராணுவ வீரர் ஜிடி, ராணுவ வீரர் தொழில்நுட்பம், செவிலியர் உதவியாளர், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் ஆகிய பதவிகளுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளன.
இதில், ராணுவ வீரர் ஜிடி மற்றும் டிரேட்ஸ்மேன் ஆகிய பதவிகளுக்கு 8-ம் வகுப்பும், டிரேட்ஸ்மேன் பதவிக்கு 10-ம் வகுப்பும் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வு முகாமில் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட 11 மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில், 22-ஆம் தேதி தருமபுரி மாவட்டம், 23-ஆம் தேதி மதுரை, 24-இல் மதுரை, திருப்பூர் மற்றும் கோயமுத்தூர் ஆகிய மாவட்டங்களும், 25-ஆம் தேதி தேனி, 26-இல் தேனி, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல்மாவட்டங்களும், 27-ல் கிருஷ்ணகிரி, 28-ல் கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோர் கலந்து கொள்ளலாம்.
எனவே, இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிய விருப்பமுள்ள இளைஞர்கள் தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்குக்கு மேற்காணும் தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு வர வேண்டும்.
அனைத்துத் தேர்வர்களும் 1.6 கி.மீ தூர ஓட்டம் மற்றும் உடல் தகுதித் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே அவர்களது விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.
உடல் தகுதித் தேர்வு பெற்று இருப்பினும், ஆவணங்களில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் ராணுவ ஆள்தேர்வு முகாமிலிருந்து தேர்வு செய்யப்பட்ட நபர்கள் நீக்கம் செய்யப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












